நந்திக்கலம்பகம் உரை
ஊசல் :-
ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்
உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்
அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவர்க்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்
விளக்கம் :-
சிவந்த வரி பரந்த கண்களை உடைய தோழிகளே! வாருங்கள் ஊஞ்சலாடுவோம், நமது பட்டாடைகள் காற்றில் அசையும் படி ஊஞ்சலாடுவோம். பொன்னால் ஆன ஆபரணங்கள் காற்றில் அசையும் படி ஊஞ்சலாடுவோம். அழகிய பூவைச் சூடிய கூந்தல் அசைந்து ஆடும்படி ஊஞ்சலாடுவோம். தம்மோடு பகையோடு போர் புரிய வந்த பகைவர்களை "தெள்ளாறு" என்ற இடத்தில் போர் செய்தான். அப்போது அந்தப் போரில் நந்திவர்மன் பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்றான். அத்தகைய நந்தி வர்மன் திசைகள் எல்லாம் சுற்றிச் செல்கின்ற படைகளை உடையவன். அவன் காடவன் என்பவனுடைய தமையன். இத்தகைய சிறப்புகளை உடைய நந்திவர்மனின் கையில் உள்ள வேலையும் அவனது காஞ்சிபுர நகரையும் புகழ்ந்து பாடி நாம் ஊஞ்சல் ஆடுவோம் என்று தலைவி தோழிகளை அழைக்கின்றாள்.
உள்ளுரை உவமப்பாடல் :-
( மகளிர் கூற்று)
நங்கள்கோத் தொண்டை வேந்தன்
நாமவேல் மன்னர்க் கெல்லாம்
தங்கள்கோன் அங்க நாடன்
சந்திர குலப்ர காசன்
திங்கள்போல் குடையின் நீழற்
செய்யகோல் செலுத்தும் என்பர்
எங்கள்கோல் வளைகள் நில்லா
விபரீதம் இருந்த வாறே.
விளக்கம் :-
எங்கள் மன்னனும், தொண்டை நாட்டு வேந்தனும், அச்சத்தை தரும் வேலையுடைய அரசர்களுக்கெல்லாம் அரசனும், அங்க நாட்டை உடையவனும், சந்திர குலத்திற்கு ஒளிசெய்பவனுமாகிய நந்தி மன்னன். சந்திரன் போன்ற குடையினுடைய நிழலில் செங்கோலைச் செலுத்துவான் என்று கூறுவர். ஆனால், எங்கள் கையில் அணிந்த வளையல்கள் நில்லாததாகிவிட்டன. மாறுபட்ட இந்த நிலையில் இருந்த இவ்விதம் ஏன்?
உள்ளுரை :-
நந்தி மன்னன் மீது காதல் கொண்ட மகளிர் கூற்று. "உலகில் எல்லோரையும் இனிது காக்கின்ற நந்தி, நாங்கள் மட்டும் அவன் மீது கொண்ட காதலால் கைவளையல்கள் கழன்று விழும்படி வருந்தச் செய்கின்றானே! அவனுடைய அருளில் இந்த மாறுபட்ட நிலை ஏன்" என்று கூறினர்.
No comments:
Post a Comment